

ஜம்முவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் காணொலிக் காட்சி முறையிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவிடம் காஷ்மீர் பண்டிட்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. காஷ்மீர் முஸ்லிம்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கருத்து நிலவுகிறது. இது மிகவும் தவறானது. நாடு சுதந்திரம் அடைந்தது முதலே பண்டிட் சமூகத்தினருக்கு காஷ்மீர் முஸ்லிம்கள் உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் சூழ்ச்சியாலும், சதியாலும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நேர்மையான உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.