

கர்நாடகாவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதே போல் பெங்களூருவில் உள்ள பெங்களூரு மாளிகையும் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுவதாக கர்நாடகா மாநில முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு கர்நாடகாவில் அதிகரிப்பதையடுத்து பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையமும் சமீபத்தில் கோவிட்-19 சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கர்நாடகா மாநில கோவிட்-19 நிர்வாகி கூறும்போது, “பெங்களூரு மக்கள் பதற்றமடைய வேண்டாம். தேவையான உபகரணங்கள், மற்றும் தயாரிப்புகளை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனா நோயாளிகளுக்கென பிரத்யேகமாக 600 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன” என்றார்.
கர்நாடகாவில் இன்றைய நிலவரப்படி 28,877 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,531 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,876 பேர் குணமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 470 பேர் கரோனாவில் பலியாகியுள்ளனர்.