

மும்பை பாஜக பொதுச்செயலாளர் மோகித் கம்போஜ் மற்றும் நான்கு பேருக்கு எதிராக ரூ.57 கோடி வங்கி மோசடி வழக்கை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மோகித் கம்போஜின் இல்லம் மற்றும் அலுவலக வளாகங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. தனியார் நிறுவனத்தில் மேற்கொண்ட ரெய்டில் குற்றங்கள் தொடர்பான சில ஆவணங்களும் சிக்கின.
அவியான் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மோகித், 2013 ஆம் ஆண்டில் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து ரூ.60 கோடி கடன் பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு வரை கடன்களை வழங்காததால் மோகித்தின் நிறுவனம் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கி நடத்திய உள் விசாரணையில், வங்கியிலிருந்து பெற்ற கடனை திசைத்திருப்பி நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரின் பெயரில் பிளாட் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 2014 முதல் நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கைகளையும் தாக்கல் செய்யவில்லை.
நிறுவனம் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் அதன் இயக்குனர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் புரோமோட்டர்கள் வங்கியின் பணத்தை பெற்று மோசடி செய்ததால், வங்கிக்கு ரூ.57.22 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம் சிபிஐக்கு புகாரளித்தது. வங்கியின் புகாரின் அடிப்படையில் மோஹித் கம்போஜ், அபிஷேக் கபூர், நரேஷ் கபூர், சித்தாந்த் பாக்லா, இர்தேஷ் மிஸ்ரா, அவியான் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட், கேபிஜே ஹோட்டல்கள் ஆகியோருக்கு எதிராக மோசடி, குற்றச்சதி மற்றும் ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இந்த ரெய்டு, வழக்குகள் குறித்து மோஹித் கம்போஜ், ‘சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பேன்’ என்று கூறினார்.