

டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங், பாஜக டெல்லி மாநிலத் தலைவர் அதேஷ்குப்தா, மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்திரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர்கள், கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடும் திட்டங்களைத் தெரிவித்தனர். மத்திய அரசு, புதுடெல்லி அரசு மற்றும் புதுடெல்லியின் 3 மாநகராட்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
டெல்லியில், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். கோவிட்-19 நிலவரம் குறித்து டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அமித் ஷா கூறுகையில், பெருந்தொற்றை எதிர்த்துப் போராட நாம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றார்.
நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை, மத்திய உள்துறை அமைச்சர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முடிவுகளை அடிமட்ட அளவில் நேர்மையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். டெல்லி மக்களின் நலனுக்காக, மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த தங்கள் கட்சித் தொண்டர்களை அரசியல் கட்சிகள் ஈடுபடுத்த வேண்டும் என அமித் ஷா கேட்டுக் கொண்டார். மக்கள் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் செயல்பட வேண்டும் என அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் ஒற்றுமை மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி தலைநகரில் தொற்று நிலைமை மேம்பட வழிவகுக்கும் என அவர் கூறினார். புதிய தொழில் நுட்பங்களுடன் கோவிட்-19 பரிசோதனையை நாம் மேம்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் கூறினார். ஒன்றாக இருந்து, தொற்றுக்கு எதிரான போரட்டத்தில் வெல்வோம் என அமித் ஷா வலியுறுத்தினார்.