Last Updated : 08 Jun, 2020 05:11 PM

 

Published : 08 Jun 2020 05:11 PM
Last Updated : 08 Jun 2020 05:11 PM

பூமி பூஜைப் பணி: அயோத்தியில் முறைப்படி ராமர் கோயில் கட்டும் பணி புதன்கிழமை தொடக்கம் 

கோப்புப்படம்

அயோத்தி

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணி முறைப்படி முதல் செங்கல் எடு்த்து வைக்கப்பட்டு வரும் புதன்கிழமை தொடங்கப்படுகிறது.

குபேர திலக கோயிலில் உள்ள சிவனுக்கு பூஜை நடத்தப்பட்டு ருத்ரா அபிஷேகம் நிகழ்ச்சி முடிந்தபின் இந்தப் பணி தொடங்கப்படுகிறது. இந்த ருத்ரா அபிஷேக நிகழ்ச்சியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் நபர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் கடந்த இருமாதங்களாக நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் மீண்டும் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் ராமர் ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை பணி வரும் 10-ம் தேதி காலை 8 மணிக்கு பூஜையுடன் தொடங்க உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்யிா கோபால் தாஸின் செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் நிருபர்களிடம் இன்று கூறுகையில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டுமானப் பணி ருத்ரா அபிஷேகத்துடன் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.

கடவுள் ராமர் வழிபட்ட சிவனுக்கு முதல் பூஜை நடத்தப்படுகிறது. அந்தப் பூஜைகள் அனைத்தும் பழமையான குபேர திலக கோயிலில் இருக்கும் சிவன் ஆலயத்தில் நடக்கும்.

வரும் 10-ம் தேதி காலை 8 மணிக்கு பூஜை தொடங்கும். பூஜையை மகந்த் கமல் நாயன் தாஸ் உள்ளிட்ட மற்ற சாதுக்கள் ஆகியோர் செய்கின்றனர். இந்தப் பூஜை 2 மணிநேரம் நடக்கும். இந்த நிகழ்ச்சிக்கு மிகச் சிலரே அழைக்கப்பட்டுள்ளனர்

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் 77 நாட்களுக்குப் பின் பக்தர்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர். காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x