பிஹார் கரோனா தனிமை முகாமில் 40 சப்பாத்தி, 10 தட்டு சாதம் சாப்பிடும் தொழிலாளி

பிஹார் கரோனா தனிமை முகாமில் 40 சப்பாத்தி, 10 தட்டு சாதம் சாப்பிடும் தொழிலாளி
Updated on
1 min read

‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் நடிகர் சூரி, 50 பரோட்டா சாப்பிடும் சவாலை ஏற்று களத்தில் இறங்குவார். 50 பரோட்டா சாப்பிட்ட நிலையில் ஓட்டல் ஊழியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். அப்போது மீண்டும் 50 பரோட்டா சாப்பிட சூரி தயாராவார்.

இந்த திரைப்பட காட்சியை மிஞ்சும் வகையில் பிஹாரின் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி அனூப் ஓஜா (23), 10 பேர் சாப்பிடும் உணவு வகைகளை ஒரேஆளாக சாப்பிடுகிறார். ராஜஸ்தானில் பணியாற்றி வந்த அவர், ஊரடங்கால் வேலையிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புசொந்த மாவட்டத்துக்கு திரும்பினார். வழக்கமான நடைமுறைகளின்படி பக்சர் மாவட்டத்தின் மஜ்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டார்.

காலை உணவாக அவருக்கு சப்பாத்திகள் வழங்கப்பட்டன. சில சப்பாத்திகள் சாப்பிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 40 சப்பாத்திகளை சாப்பிட்டுவிட்டு போதவில்லை என்று அவர் கூறியதால் சமையல்காரர் அதிர்ச்சி அடைந்தார். முகாமில் 100 தொழிலாளர்கள் உள்ளனர். அனைவருக்கும் மதிய உணவாக அரிசி சாதம் வழங்கப்பட்டது. அப்போது 10 தட்டு சாதத்தை சாப்பிட்டுவிட்டு ‘பசிக்கிறது' என்று அனூப் ஓஜா அடம்பிடித்தார் .

இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரடியாக முகாமுக்கு சென்று ஒருநாள் முழுவதும் அனூப் ஓஜாவை கண்காணித்தனர். காலையில் 40 சப்பாத்தி, மதியம் 10 தட்டு சாதம், மாலையில் 88 லிட்டிகளை (பிஹார் தின்பண்டம்) சாப்பிட்ட அவரை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in