

காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் புறா ஒன்று பறந்து வந்துள்ளது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்ததால், சந்தேகமடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புறாவைப் பிடித்து உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்தப் புறாவை போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் பரிசோதித்தனர். அப்போது அதன் ஒரு காலில் மோதிரம் போன்ற வளையம் மாட்டப்பட்டிருந்தது. அதில் ரகசிய குறியீடாக சில எண்களும் இருந்தன. இந்திய பகுதிகளை உளவு பார்க்கவோ அல்லது வேறு ஏதேனும் சங்கேத வார்த்தைகளை தெரிவிப்பதற்கோ பாகிஸ்தானில் இருந்து புறா அனுப்பப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
எதற்காக புறா அனுப்பப்பட்டது? புறாவின் காலில் இருந்த வளையத்தில் உள்ள எண்கள் எதைக் குறிக்கின்றன என்று தெரிந்து கொள்வதற்கான ஆய்வில் புலனாய்வு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதை கதுவா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷைலேந்திர மிஸ்ரா தெரிவித்தார். ரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து உளவுப் புறா அனுப்பப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.