தமிழகத்தில் சிக்கிய வெளி மாநிலத்தவருக்கு உதவி வரும் டெல்லி தமிழ்நாடு இல்லம்

தமிழகத்தில் சிக்கிய வெளி மாநிலத்தவருக்கு உதவி வரும் டெல்லி தமிழ்நாடு இல்லம்
Updated on
1 min read

தமிழகத்தில் சிக்கிய வெளி மாநிலத்தவருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லம் உதவி வருகிறது.

ஊரடங்கால் தமிழகத்தில்சிக்கிய வெளி மாநிலத்தினருக்கு டெல்லியில் உள்ள ‘தமிழ்நாடு இல்லம்’ அதிக உதவிகளை செய்துள்ளது. இதுவரை உதவிகேட்டுவந்த சுமார் 70,000 தொலைபேசிஅழைப்புகளில் ஒரு லட்சம்பேருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25 முதல் தேசியஅளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் சிக்கியவர்கள் உதவி கேட்டு பல்வேறு தரப்பினரையும் அணுகியுள்ளனர். தமிழகத்தில் சிக்கியவர்களில் பலர், டெல்லியில் உள்ள தங்கள் மாநில அரசு இல்லங்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர். இதைக் கேட்டறிந்த அங்குள்ள அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ்குமார் மக்வானாவை தொடர்பு கொண்டுள்ளனர்.

இதையடுத்து தமிழக அரசிடம் முறையான அனுமதி பெற்ற மக்வானா, தமிழ்நாடு இல்லம் சார்பில் அந்த உதவிகளை செய்யத் தொடங்கினார். இதனால்தமிழகத்தில் சிக்கிய வெளி மாநிலத்தவருக்கு தேவையான உதவிகள் கிடைத்துள்ளன.

இதுபோல டெல்லியில் உள்ளபல்வேறு மாநில அரசு இல்லங்களின் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் உதவியுள்ளனர்.

டெல்லி சாணக்யபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லமான பொதிகை இல்லத்தில் ‘கோவிட் 19 ஹெல்ப்லைன்’ செயல்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் சிக்கியவெளி மாநிலத்தவர்களில் சுமார்ஒரு லட்சம் பேருக்கு உதவி கிடைத்திருப்பதாக தமிழ்நாடு இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர் பிஹார் மற்றும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுகுறித்து டெல்லி சாணக்யபுரியில் உள்ள ‘பிஹார் பவன்’ அதிகாரிகள் ‘இந்து தமிழ்' நாளேட்டிடம் கூறும்போது, “சென்னை, வேலூர், திருப்பூரில் எங்கள் மாநிலத் தொழிலாளர்கள் தங்களுக்கு உணவு, உறைவிடம் போன்ற உதவிகள் கோரினர். நாங்கள் தமிழ்நாடு இல்லத்தை தொடர்புகொண்டதை தொடர்ந்து, அவர்கள் அம்மூன்று மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உடனடியாக அந்த உதவிகள் கிடைக்கச் செய்தனர். இதுபோல, பிஹாரில் சிக்கிய தமிழர்களுக்கு தமிழ்நாடு இல்லம் சார்பில் கேட்கப்பட்ட உதவிகளை செய்தோம்” என்றனர்.

வெளி மாநிலங்களில் சிக்கிய தமிழர்களும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஹெல்ப்லைனில் உதவி கோரியுள்ளனர். ஹரியாணா, தெலங்கானா, கர்நாடகா, உ.பி.,குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்த அழைப்புகள் வந்துள்ளன. மும்பையின் மாஹிம் பகுதியில் சிக்கிய 120 தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் தமிழ்நாடு இல்லம் மூலம் கிடைத்துள்ளன. இந்த வகையில், சுமார் 4,000 தமிழர்கள் பலன் அடைந்துள்ளதாக தமிழ்நாடு இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in