

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,990 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா இந்தியாவில் பரவத்தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1990 பேர் பாதிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும். இதில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்கள் நிலைமைதான் மோசமாக இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் 26 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,804 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணி்க்கை 19,868 ஆக இருக்கிறது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நேற்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் நேற்று ஒருவர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் 33 பேரும், தெலங்கானாவில் 26 பேரும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் 23 பேர், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா 18 பேர், பஞ்சாப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 6 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணா, ஜார்க்கண்ட், தலா 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 7,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,076 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் 2,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 869 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 3,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,083 பேரும், தமிழகத்தில் 1,821 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 960 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,096 பேரும், தெலங்கானாவில் 991 பேரும், கேரளாவில் 457 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 1,793 பேர், ஆந்திரவில் 1,061 பேர், கர்நாடகாவில் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 494 பேர், மேற்கு வங்கத்தில் 611 பேர், பஞ்சாப்பில் 298 பேர், ஹரியாணாவில் 289 பேர், பிஹாரில் 243 பேர், அசாமில் 36 பேர், உத்தரகாண்ட்டில் 48 பேர், ஒடிசாவில் 94 பேர், சண்டிகரில் 28 பேர், சத்தீஸ்கரில் 37 பேர், லடாக்கில் 20 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் 67 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.