மருந்து வாங்கச் சென்றவர் மீது போலீஸ் தடியடி: சிகிச்சை பலனின்றி ஆந்திர இளைஞர் பலி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முகமது கவுஸ் (29). இவர் சில நாட்களாக உடல்நிலை சரியின்றி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை சத்தனப்பள்ளி வாகன சோதனைச் சாவடி அருகே உள்ள ஒரு மருந்துக் கடையில் தனக்கு மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சோதனைச் சாவடி அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இவரை வழிமறித்து, ஊரடங்கு உத்தரவின்போது வெளியில் ஏன் சுற்ற வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு அவர், நான் மருந்து வாங்க வந்ததாக பதில் அளித்துள்ளார். இதனை போலீஸார் கண்டுகொள்ளாமல் முகமது கவுஸ் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

3 போலீஸார் சரமாரியாகத் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே முகமது கவுஸ் மயங்கி விழுந்துள்ளார் . அதன்பின்னர் அவரை சத்தனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுஸ் உயிரிழந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனை முன்பு கூடத் தொடங்கினர்.

கவுஸின் மரணத்திற்கு போலீஸாரின் அராஜகமே காரணமென விமர்சிக்கப்பட்டது. பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in