

வரும் 20-ம் தேதி முதல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்றவை விற்பனையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள், மொபைல் போன், டிவி, லேப்டாப், ஸ்டேஷனரி உள்ளிட்ட அனைத்துவகையான பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வரும் மே மாதம் 3-ம் தேதி வரை லாக் டவுன் நடைமுறை இருந்தாலும், வரும் 20-ம் தேதிக்குப் பின் சில தொழில்களுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி நேற்று அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.
அதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் வரும் 20-ம் தேதி முதல் அனைத்து வகையான பொருட்களையும் மக்கள் ஆர்டர் செய்யலாம். அதேசமயம், அந்தப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு அந்தந்த உள்ளூர், நகர அதிகாரிகளிடம் முறையாக நிறவனங்களின் முகவர்கள் அனுமதி பெற வேண்டும்.
அதாவது வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் பிரிவில் இருக்கும் பணியாளர்களுக்கும், வாகனங்களுக்கும் அனுமதி பெறுவது கட்டாயம்.
இதற்கு முந்தைய அறிவிப்பில் உணவு, மருந்துப்பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலையில் வரும் 20-ம் தேதிக்கு மேல் அனைத்துப் பொருட்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொருட்களை டெலவிரி செய்யும் பிரிவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்துவது அவசியம். கண்டிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல டிரக்குகள், லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களை இயக்கும்போது, இரு ஓட்டுநர்கள், ஒரு உதவியாளர்கள் உகந்த ஆவணங்களுடன் வாகனத்தை இயக்க வேண்டும். பொருட்களை எடுத்துச் செல்லவோ அல்லது டெலிவரி செய்துவிட்டுச் செல்லும்போது காலியான வாகனங்களுடன் செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், நெடுஞ்சாலை ஓரங்களில் தாபாக்கள் (உணவகங்கள்), டிரக், லாரி பழுதுநீக்கும் கடைகள் குறைந்த இடைவெளியில் செயல்படஅனுமதிக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு மூத்த அதிகாரி விளக்கம் அளித்தார்.