வீட்டில் இருந்து பணி புரிவதால் 67% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதி

வீட்டில் இருந்து பணி புரிவதால் 67% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதி
Updated on
1 min read

இந்தியர்கள் 67 சதவீதம் பேர்வீட்டிலிருந்து பணி புரியும் சூழலால் தூக்கத்தை தொலைத்து நிம்மதியின்றி கடும் நெருக்குதலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் வர்த்தக மேலாளரான அன்கீத் சிங் (42) வீட்டிலிருந்து பணி புரிவது என்பது மிகவும்சிரமமானதாக உள்ளதாகக் கூறியுள்ளார். இதற்குமுன் வீட்டிலிருந்து அலுவலக பணி புரிவது என்ற சிந்தனையே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தனக்கு ஓய்வு என்பதே இல்லை என்று குறிப்பிடும் அவர், தினசரி காலை 5 மணிக்கு எழுந்துவிடுவதாகவும் அலுவலகப் பணிகளை முடித்து லேப்டாப்பை மூடும்போது இரவு 10 மணி ஆகிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். வழக்கமாக 7 மணிக்கு பணிகளை முடித்து வீடுதிரும்பி விடும் அவர் தற்போது இரவு 10 மணி வரை போராட வேண்டியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். கடந்த 20 நாட்களுக்கும் மேலான இந்த வேலைப் பளுவினால் ஏற்பட்ட உளைச்சலில் இருந்து விடுபட தற்போது உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறார்.

வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்பாலானோர் மிகப் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்குக் காரணமே பணிகளை சரிவர கையாளத் தெரியாததுதான். சமீபத்தில் பலர் தன்னிடம் உளவியல் ஆலோசனை பெற்று வருவதாகக் கூறுகிறார் மன நல மருத்துவர் ஸ்வேதா சிங். இவர்களில் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சமீபத்தில் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் 67 சதவீத இந்தியர்கள் தற்போது பணிப்பளு காரணமாக இரவு 11 மணிக்குப்பிறகுதான் தூங்கச் செல்வதாகத் தெரிவித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்தால்தான் தாங்கள் நிம்மதியாகத் தூங்க முடியும் என்று 81சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் 1,500 பேரிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஊரடங்குக்கு முன்பு வரை இரவு 11 மணிக்கு முன்பே தூங்கச் சென்றுவிட்டதாக 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தற்போது 11 மணிக்கு முன்பு தூங்கச் செல்வதாக 39 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

25 சதவீதம் பேர் இரவு 12 மணிக்குத்தான் தூங்கச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் 12 மணிக்குப் பிறகுதான் தூங்கச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் பேர் பின்னிரவில்தான் தூங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பலவித நெருக்குதல் உருவாகியுள்ளதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தங்கள் வேலை மீதான ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரைக் காக்க வேண்டிய சூழல்மிகுந்த உளச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் பலரும் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டதாக புலம்புகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in