

மகாராஷ்டிராவில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வரும்நிலையில் புனே நகரில் 3 நாட்களுக்கு கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
அங்கு 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் முதன்முறையாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி மக்கள் தாமாக முன்வந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புனே நகரில் 3 நாட்களுக்கு கடைகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
புனே நகர வர்த்தக சங்கத்தினர் தாமாக முன்வந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற அனைத்தையும் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன.