சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்: உ.பி. அலிகரில் பலத்த பாதுகாப்பு

பிரதிநிதித்துவத்திற்கான கோப்புப் படம்.
பிரதிநிதித்துவத்திற்கான கோப்புப் படம்.
Updated on
1 min read

கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்புப் போராட்டத்தின் போது காயமடைந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானதால் அலிகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறும்போது 22 வயதான மொகமது தாரிக் முனாவர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையடுத்து கடந்த சில நாட்களாக வெண்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார், இவரது உடல் நிலை வெள்ளிக்கிழமை மாலை மோசமானதையடுத்து நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி முனிராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வியாழக்கிழமையன்று பலியான முனாவர் மீதான தாக்குதல் தொடர்பான புகாரில் உள்ளூர் பாஜக பிரமுகர் வினய் வர்ஷ்னே கைது செய்யப்பட்டார்.

பாப்ரி மண்டி பகுதியில் வர்ஷ்னேயைப் பிடித்து கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக தலைவர் தவிர அப்பர் காட் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக முஷ்டகீம், அன்வார், ஃபாமிமுத்தின், சபீர் மற்றும் இம்ரான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் இதில் வர்ஷ்னே வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்லார், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சில இந்து வலதுசாரி குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து அலிகாரில் பல கடைகள் மூடப்பட்டு ஒரு அசவுகரியமான இருண்ட மவுனம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகளை தொடங்கியுள்ளது, வன்முறைகள் தொடர்பாக யாரிடமாவது வீடியோக்கள் இருந்தால் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

குறிப்பாக முனாவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இத்தகைய வீடியோக்களை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று உயர் போலீஸ் அதிகாரி முனிராஜ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in