

உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவலில் பலரால் தாக்கப்பட்ட பிறகு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
“மருத்துவத்தில் தங்கள் உறுதிமொழிக்கு ஏற்ப அறத்துடன் செயல்படாமல் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மீது உத்தரப் பிரதேச அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.குல்தீப் சிங் செங்கார், இவரது சகோதரர் மற்றும் 5 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியது.
மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா, “விசாரணையில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் காவலில் தாக்கப்பட்ட அவருக்கு அலட்சியம் காட்டி சிகிச்சை அளிக்காதது மருத்துவர்களின் கடமை தவறலாகும், எனவே உ.பி. அரசு முறையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதே சரி” என்று உத்தரவிட்டார்.
இது தொடர்பான விசாரணையில் டாக்டர்களுக்கு எதிராக சாட்சியங்கள், ஆதாரங்கள் கிடைத்தால் நிச்சயம் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறினார் நீதிபதி.
பாலியல் பலாத்கார பாதிப்புப் பெண்ணின் தந்தைக்கு சரிவர சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று செங்கார் கூறியதால்தான் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாக மூத்த வழக்கறிஞர் தர்மேந்திர மிஸ்ரா கடும் குற்றம்சாட்டினார்.