

உத்தர பிரதேசத்தை போலவே, கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக வன்முறை சம்பவங்கள் ஏதுமில்லை. அமைதி திரும்பியுள்ளது.
இந்தநிலையில் கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வரும் அவர்கள் அதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.
கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறையை உ.பி. அரசு அண்மையில் அமல்படுத்தியது.
அதனை பின்பற்றி டெல்லி மாநில போலீஸாரும் வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும், இதற்காக நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.