

டெல்லி கலவரம் தொடர்பாக அம்மாநில காவல்துறை மிக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் புதிய காவல் ஆணையராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் கலவரம் ஏற்பட்டபோது, உளவுத்துறை தகவலை பெற்று காவல்துறை முன்கூட்டியே செயல்படவில்லை என்ற புகார் உள்ளது. பலர் உதவிகேட்டு போராடிய நிலையில் உரிய நேரத்தில் காவல்துறை உதவி அவர்களுக்கு கிடைக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்தநிலையில் டெல்லியின் புதிய காவல் ஆணையராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஆணையர் அமுல்யா பட்நாயக் வரும் நாளை பதவி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீவத்சவா புதிய ஆணையராக பதவியேற்கிறார். ஸ்ரீவத்சவா தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
கலவரத்தை ஒடுக்குவதற்கான சிறப்பு பணி அவரிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. 1985-ம் ஆண்டு கோவா- அருணாச்சல பிரதேசம்- மிசோரம் யூனியன் பிரதேச ஐபிஎஸ் பிரிவில் இருந்து தேர்வான அவர் நீண்டகாலம் காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்