

டெல்லி கலவர விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.
பின்னர் இதுகுறித்து மன்மோகன் சிங் கூறுகையில் ‘‘டெல்லியில் நடந்த கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் பெரிய அவமானம். அரசு நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கதக்கது. ராஜதர்மத்தை காப்பற்ற வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினோம்.’’ எனக் கூறிானர்.