டெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு; மக்கள் அமைதி காக்கும்படி போலீஸார் வேண்டுகோள்

மஜ்பூர் பகுதியில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்.
மஜ்பூர் பகுதியில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்.
Updated on
2 min read

டெல்லி வடகிழக்குப் பகுதியான மஜ்பூர், கர்தாம்பூரி உள்ளிட்ட பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே 2-வது நாளாக இன்று மோதல் வெடித்தது. இதனால் வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவை போலீஸார் விதித்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியின் தென்கிழக்குப் பகுதியான ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு முதல் முஸ்லிம் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மூடப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெண்கள் கைகளில் தேசியக் கொடி ஏந்தியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் மஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஊர்வலமாக வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதன்பின் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இந்தச் சூழலில் இன்று 2-வது நாளாக மஜ்பூர், ஜாப்ராபாத், சாந்த்பாக், கர்தாம்பூரி ஆகிய பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீஸார் அங்கு சென்று கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் காணப்படுவதாலும், மீண்டும் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதாலும் வடகிழக்கு டெல்லி பகுதியான மஜ்பூர், கர்தாம்பூரி, சாந்த் பாக், தயால்பூர் ஆகிய இடங்களில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், "வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் குறிப்பாக மஜ்பூர், கர்தாம்பூரி, சாந்த் பாக், தயால்பூர் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் சேர்ந்து செல்லக்கூடாது. வடகிழக்கு டெல்லியில் உள்ள மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டுகோள் விடுக்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றமான எந்தவிதமான காட்சிகளையும் ஊடகங்கள் வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

டெல்லியில் முழுமையாக அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in