

சுற்றுச்சூழல் ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டின் (டிஇஆர்ஐ) முன்னாள் தலைவருமான ஆர்.கே. பச்சோரி(79)
நேற்றுமுன்தினம் காலமானார்.இதய நோயால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த பச்சௌரி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பச்சோரி தனது மனைவி, மகள், மகனுடன் வாழ்ந்து வந்தார்.
முன்னதாக, பச்சோரி உடல்நிலை மோசமானதை அடுத்து டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே பச்சோரியின் மறைவுக்கு ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
கடந்த 2007-ல் பருவநிலை மாற்ற விவகாரத்தில் சர்வதேச அரசுகளுக்கான ஐ.நா. குழுவின் தலைவராக பதவி வகித்து வந்தபோது பச்சோரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 2001-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும், 2008-ல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, சக பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பச் சோரி ராஜிநாமா செய்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ