Published : 14 Feb 2020 02:37 PM
Last Updated : 14 Feb 2020 02:37 PM
நிர்பயா வழக்கில் தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தும், சீராய்வு மனுத் தாக்கல் செய்தும் தண்டனையைத் தள்ளிப்போடக் காரணமாக இருந்தனர். இதனால் தூக்கு தண்டனையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வினய் சர்மா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வினய் சர்மா தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகி வாதிட்டார்.
மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மூன்று தரப்பு வாதங்களும் ஏறக்குறைய 2 மணிநேரம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வினய் சர்மாவின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT