Published : 11 Feb 2020 03:44 PM
Last Updated : 11 Feb 2020 03:44 PM

டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி: நாம் சரியானதைச் செய்கிறோமா?- குஷ்பு விரக்தி

டெல்லியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியினரே ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதற்காக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனென்றால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினரோ இந்தத் தோல்வியை விடுத்து, பாஜகவின் தோல்வி குறித்துப் பேசி வருகிறார்கள்.

இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், "டெல்லியில் காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் நசுக்கப்பட்டுவிட்டது. நாம் போதுமானதைச் செய்கிறோமா, நாம் சரியானதைச் செய்கிறோமா, நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாகப் பதில் வரும்.

நாம் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை விஷயங்களைச் சரி செய்ய வேண்டும். ஆனால் மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜக கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.

இந்தப் பதிவுக்கு அவரது ட்விட்டர் தளத்தைப் பின்தொடரும் ஒருவர், "அரசியல் என்பது 24/7 வியாபாரம். உங்கள் கட்சியிடம் போதிய ஆக்ரோஷம், ஆவேசம், பார்வை எதுவும் இல்லை" என்று பதிலளித்தார். அதற்கு குஷ்பு "ஏற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

கேஜ்ரிவாலுக்கு கைகொடுத்த கல்வி, மாநில உரிமை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x