

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் நன்கொடையாக மத்திய அரசு வழங்கியது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் டி முர்மு, மத்திய அரசின் சார்பில் ஒரு ரூபாயை அறக்கட்டளைக்கு வழங்கினார்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.
இந்த அறக்கட்டளைக்கு ஒரு தலித் உறுப்பினர் உள்பட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டரான கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சார்யா, ஜோதிஸ்பீதாதீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ் (அலகாபாத்), ஜகத்குரு மாதவாச்சார்யா சுவாமி விஸ்வா பிரசன்னதீர்த் ஜி மகராஜ் , உடுப்பி பெஜாவர் மடம், ஹரித்வாரின் யுகபுருஷ் பரமானாந்த் ஜி மகராஜ், புனேவைச் சேர்ந்த சுவாமி கோவிந்த கிரி ஜி மகராஜ் , அயோத்தியைச் சேர்ந்த விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவைச் சேர்ந்த கமாஸ்ஸவர் சவுபால், நிரமோகி அஹாராவின் மகந்த் தினேந்திர தாஸ், அயோத்தி பைதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் ஐஏஎஸ் பிரிவில் இணைச்செயலாளர் அந்தஸ்தில் ஒருவரும், இந்து மத சம்பிராதாயங்களைப் பின்பற்றும் ஒருவரும் நியமிக்கப்படுவர்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அந்த அறக்கட்டளை தனி நபரிடம் இருந்து நன்கொடை, மானியம், உதவிகள் என எந்தவிதமான பங்களிப்பையும் நிபந்தனையின்றி ஏற்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தொடக்கத்தில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் இல்லத்திலும் அதன்பின் புதிதாக ஒரு அலுவலகத்திலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளையின் தலைவர் ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பான அனைத்துப் பணிகள், மேம்பாடு ஆகியவற்றை நிர்வகிப்பார். அவருக்குத் துணையாக அறங்காவலர்கள் செயல்படுவார்கள்.