

கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து வருமான வரிச் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் (பிஎம்எல்ஏ) ஆகியவற்றை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வர்த்தகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், வர்த்தக நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை 2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் முயற்சியில் இந்தச் சீர்திருத்தம் முக்கியமானதாக இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கான செயல் திட்டம் குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
"கார்ப்பரேட் சட்டங்களை கிரிமினல் குற்றப் பிரிவில் இருந்து நீக்குதல், வரி தொடர்பான சிக்கல்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்தல், அரசு நிறுவனங்களை வேகமாகத் தனியார் மயமாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை வேகமாக அடைய முடியும்.
கம்பெனிச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளை கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்குவது குறித்தும், மாற்றம் செய்வது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. அதேசமயம், அவ்வாறு நீக்கம் செய்யப்படும் பிரிவுகள் பொதுநலனுக்கு எந்தவிதத்திலும் பாதிக்காமலும் இருக்கும்.
இந்த நடவடிக்கையில், ஏறக்குறைய 46 விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்பட உள்ளது. இதன்படி இனிமேல் தவறு நடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அபராதத்தோடு முடியும்.
அடுத்தபடியாக இந்த நடவடிக்கையை வருமான வரிச் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பரிமாற்ற நடவடிக்கைக்கும் நீட்டிக்கப்படும். சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டம் தவிர்த்து எந்தச் சட்டமும் கிரிமினல் பிரிவிலிருந்து நீக்கப்படாது".
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதனால், வரும் பட்ஜெட் தொடரில் இதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் எனத் தெரிகிறது.
கடந்த சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி பேசுகையில், " நாட்டுக்கு வளங்களை, சொத்துகளை உருவாக்குபவர்களைச் சந்தேகக் கண்களோடு பார்க்கக் கூடாது. வளங்கள் உருவாக்கப்படும்போது அவை பரவலாகப் பிரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வார்த்தையை மதித்து நாட்டில் வர்த்தகத்தை முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகக் கொண்டு செல்லும் வகையில் இந்தச் சட்டங்களை கிரிமினல் பிரிவுகளில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.