பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஏகமனதாக தேர்வு: அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஏகமனதாக தேர்வு: அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து
Updated on
1 min read

பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், அமித் ஷா மத்திய அமைச்சர் பதவி ஏற்ற நிலையில், கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கட்சி பொறுப்பில் இருந்து அமித் ஷா முற்றிலும் விலகிக் கொள்ளவும், தலைவர் பதவியை ஜே.பி.நட்டா வகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாஜக கட்சியின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெற வேண்டும். டெல்லியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜே.பி நட்டா பாஜக தலைவராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜே.பி. நட்டா தலைவர் என ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும், ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்க படுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

அதன்படி பாஜக தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக நிர்வாகிகள் ஜே.பி. நட்டாவின் பெயரை பரிந்துரை செய்து முன்மொழிந்தனர். மத்திய அமைச்சர்களும் அவரது பெயரை பரிந்துரை செய்தனர்.

தலைவர் பதவிக்கு ஒரு பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டதால் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் ஜே.பி.நட்டா ஏகமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு கட்சி நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in