Published : 14 Jan 2020 04:16 PM
Last Updated : 14 Jan 2020 04:16 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:  சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உண்மையை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை அறிக்கை தனது முந்தைய அறிக்கைகளை அப்படியே கிளிப்பிள்ளை போல் மீண்டும் தெரிவித்துள்ளது.

“நாங்கள் இந்த அறிக்கையில் திருப்தியடையவில்லை” என்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும் மூத்த சட்ட அதிகாரி, ஒரு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், இந்த வழக்கை பிற்பாடு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருக்கட்டும் என்றும் தெரிவித்தனர்.

அரைமணி நேரம் சென்ற பிறகு மீண்டும் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இம்முறை நீதிபதி நாகேஸ்வர ராவ் அதிக வார்த்தைகளை செலவழிக்காமல் தன் அதிருப்தியை ரத்னச் சுருக்கமாகத் தெரிவித்த போது, “இந்த அறிக்கைக்கும் முன்னால் தாக்கல் செய்த அறிக்கைக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

அனைத்தும் முன்பு கூறப்பட்டதே மீண்டும் கூறப்பட்டுள்ளது. பேங்காக் செல்வது அல்லது ஏதோ ஒன்று எதுவாக இருந்தாலும் ஏற்கெனவே சொன்னதுதான் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால் இந்த விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையே, அதாவது கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் என்ன முன்னேற்றம்?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி நாகேஸ்வர ராவ்.

பேரறிவாளன் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், ராஜீவ் கொலை பின்னணியில் பெரிய சதி இருப்பதாக விசரித்து வரும் சிபிஐ பல்துறை ஒழுங்கு கண்காணிப்பு ஏஜென்சி குண்டு தயாரிப்பு பற்றிய துவக்கம் குறித்து இன்னும் தன் விசாரணையை முடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சிபிஐ அறிக்கையை கோர்ட் அறையில் பரிசீலிக்குமாறு பேரறிவாளன் வழக்கறிஞர்களை நீதிமன்ற அமர்வு அனுமதித்தது. அறிக்கை சீல் செய்யப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளன் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சுமார் கால் நூற்றாண்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார், அதாவது இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட போது பேரறிவாளன் வயது 19. சிபிஐ பல்துறை ஒழுங்குக் கண்காணிப்பு ஏஜென்சி பெரிய சதி குறித்த விசாரணையை முடிக்கும் வரை தன் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு ஒன்றில் கோரினார். மேலும் சந்தேக நபர்கள் 21 பேர்களில் ஒருவரான நிக்சன் என்கிற சுரன் என்பவரை சிபிஐயின் எம்டிஎம்ஏ இன்னமும் கூட விசாரிக்கவில்லை, இவருக்குத்தான் குண்டு தயாரிக்கப்பட்ட விவரம் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் எதற்குப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தனக்கு தெரியாமலேயே இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை சப்ளை செய்ததுதான் தன் பங்கு என்று பேரறிவாளன் தன் மனுவில் கோரியுள்ளார். இது குறித்து தடா போலீஸ் அதிகாரியிடமான தன் வாக்குமூலம் செல்லுபடியாகக் கூடிய ஆதாரமல்ல என்று கோரியுள்ளார் பேரறிவாளன்.

“மேலும் சிபிஐயின் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் ஐ.இ.டி. இலங்கையில் தயாரிக்கப்பட்டது என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 9 வோல்ட் பேட்டரி ஐ.இ.டியில் சால்டரிங் செய்யப்பட்டதாக உள்ளார்ந்த ஆதாரம் உள்ளது. இப்படியிருக்கையில், மனுதாரரின் (பேரறிவாளன்) 9 வோல்ட் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டதாக எப்படிப் பார்த்தாலும் கூறுவதற்கில்லை.” என்று பேரறிவாளன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ராஜீவ் கொலை மாஸ்டர் மைண்ட் சிவராசன் இலங்கையில் உள்ள பொட்டு அம்மன் என்பவருக்கு அளித்த ஒயர்லெஸ் செய்தியில் தான் (சிவராசன்), சுபா, தனு ஆகியோருக்குத்தான் ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள சதி தெரியும் என்று கூறியுள்ளதையும் பேரறிவாளன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

“19 வயது பையனாக கைது செய்யப்படும் போது இருந்தேன், இப்போது வயது 45, இளமைப்பருவம் முழுதையும் சிறையில் அனுபவித்தேன், அதுவும் 16 ஆண்டுகளுக்கும் மேல் தனிமைச்சிறையில் கழித்தேன், இப்போது என் தாய் தந்தை தங்கள் கடைசி காலத்திலாவது தங்கள் மகனுடன் சேர்ந்து வாழ காத்திருக்கின்றனர்” என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான் உச்ச நீதிமன்ற அமர்வு சிபிஐ-யின் விசாரணை அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்து, அதில் புதிதாக ஒன்றுமில்லை என்று கூறி ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு தொடர்பாக புதிய விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யக்கோரி சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x