Published : 07 Jan 2020 12:45 PM
Last Updated : 07 Jan 2020 12:45 PM

ஜேஎன்யு வன்முறை: விசாரணையை தொடங்கியது டெல்லி காவல்துறை

ஜேஎன்யுவில் நடந்த மோதல்கள், வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸ் குழுவினர் இன்று விசாரணையை தொடங்கினர்.

டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜகவின் ஏபிவிபி அமைப்பினரும், இடதுசாரி அமைப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஜேஎன்யுவில் நடந்த மோதல்கள், வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீஸார் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இக்குழுவினர் இன்று ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு வந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

மோதல் நடந்த விவரம், தாக்கிய நபர்கள் குறித்த அடையாளம், குறித்து விசாரித்தனர். மேலும் மாணவர்கள் வைத்திருந்த ஆதாரங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x