இளைஞர்களைத் தொந்தரவு செய்தால் எந்த நாட்டு அரசும் நிலையாக இருக்க முடியாது: மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் உத்தவ் தாக்கரே | படம்: ஏஎன்ஐ
சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் உத்தவ் தாக்கரே | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல், சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்தியது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு எதிராகக் கடந்த வாரத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியபோது, போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீஸார், மாணவர்கள், தீத்தடுப்புப் படையினர் என 60 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆதரவாகப் பேரணியும் நடத்தப்பட்டது. சர்வதேச அளவில் இருந்தும் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு ஆதரவாக கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை அறிவிப்பது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்களுக்கும், சிவசேனா எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் சட்டப்பேரவைக்கு வெளியே முதல்வர் உத்தவ் தாக்கரே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே பதில் அளிக்கையில், "மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மூலம் ஒருவகையான அச்சமான சூழல் உருவாகியுள்ளது. சமூகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வேண்டுமென்ற திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி போலீஸார் நுழைந்தது, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, மாணவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆகியவை சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய பெரும்கொலைதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

தேசத்தில் உள்ள இளைஞர்களின் மனதில் ஒருவிதமான பயத்தை இந்தச் சம்பவம் உருவாக்கியுள்ளது. இளைஞர்களைத் தொந்தரவு செய்தால் எந்த நாட்டு அரசும் நிலையாக இருக்க முடியாது. இளைஞர்கள் தேசத்தின் எதிர்காலம், அவர்களிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன.

இளைஞர்கள் வெடிகுண்டு போன்றவர்கள், அதை அழுத்தி வெடிக்க வைக்கக்கூடாது. பிரதமர் மோடிக்கு இது எனது தாழ்மையான வேண்டுகோள். மகாராஷ்டிரா மாநிலம் தற்போதுவரை அமைதியாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in