கோழை மத்திய அரசு; மாணவர்கள் குரலைக் கேட்க வேண்டும்: பிரியங்கா காந்தி சாடல்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மாணவர்கள் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும், கோழையாக இருக்கிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள், காங்கிரஸ் மாணவர் தேசியக் கூட்டமைப்பு கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 3 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டன, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் மாணவர்கள் மீது போலீஸார் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்தேறின.

மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " சர்வாதிகாரத்தின் மூலம் மாணவர்களின் துணிச்சலையும், குரலையும் மோடி அரசு அடக்க முயன்றால் விரைவில் இளைஞர்களின் குரலைக் கேட்க வேண்டியது இருக்கும்.

நாட்டின் பல்கலைக்கழகத்துக்குள் சென்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய நேரத்தில் வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி மக்களையும், மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும் அடக்கி ஒடுக்குகிறது. இந்த அரசு கோழைத்தனமான அரசு.

மக்களின் குரல்களைக் கேட்க மத்திய அரசு அச்சப்படுகிறது. இளைஞர்களின் குரலையும், அவர்களின் துணிச்சலையும் அடக்க முயல்கிறது. இது இந்திய இளைஞர்களின் குரலைக் கேட்க வேண்டும். அதை அடக்குமுறையின் மூலம் அடக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in