உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
Updated on
1 min read

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டெல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக , பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது வழக்கறிஞர்கள், உறவினர்களுடன் காரில் சென்ற போது லாரி மோதியதில் உறவுக்கார பெண்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட சிறுமியை கொல்ல நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை, விபத்து, மற்றும் அதன் தொடர்புடைய வழக்கு என மொத்தம் 5 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும்வழக்குகளை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனிடையே குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இரு தரப்பு வாதங்களும் நிறைவுற்றுள்ளன.

இந்நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கவுள்ளது.

வழக்கு விசாரணை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின்போது அரசு தரப்பில் 13 சாட்சிகளும், பிரதிவாதியின் தரப்பில் 9 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். சிறுமியின் தாயாரும், அவரது மாமாவும் அரசின் முக்கிய சாட்சிகளாக உள்ளனர். இந்த நீதிமன்றம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்துள்ளது.

சிறுமியிடம் நீதிபதி விசாரணை நடத்தியபோது கேமராக்கள் அணைக்கப்பட்டன. சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதிநேரடியாகப் பதிவு செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வரவுள்ளதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in