முஸ்லிம்களுக்கான உயர் நிலைக்குழு பரிந்துரையை அமலாக்க மக்களவையில் ரவிக்குமார் கோரிக்கை

முஸ்லிம்களுக்கான உயர் நிலைக்குழு பரிந்துரையை அமலாக்க மக்களவையில் ரவிக்குமார் கோரிக்கை
Updated on
1 min read

முஸ்லிம்களுக்காக 2017 ஆம் ஆண்டு உயர்நிலைக் குழு அளித்த பரிந்துரைகளை அமலாக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதை மத்திய அரசிடம் விழுப்புரம் தொகுதி எம்.பி.யான டி.ரவிக்குமார் நேற்று மக்களவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து டி.ரவிக்குமார் மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது:

''முஸ்லிம்களின் துயரம் தரும் கல்வி நிலை குறித்து இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

முஸ்லிம்களில் சுமார் 43% பேர் படிப்பறிவு அற்றவர்கள் என்பது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வியில் இவ்வளவு மோசமாக இல்லை.

முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு 2017 ஆம் ஆண்டு தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் 211 மத்திய பள்ளிகளை அமைக்கவும்; 25 கம்யூனிட்டி கல்லூரிகளை அமைக்கவும் ஐஐடியின் தரத்தில் 5 நிறுவனங்களை உருவாக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை அந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. உடனடியாக அவற்றை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in