

இந்திய தேர்தல் ஆணையம்
புதுடெல்லி: கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறிய 529 வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 10ஏ-ன் கீழ் செலவு கணக்குகளை முறைப்படி தாக்கல் செய்யாத 529 வேட்பாளர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த மார்ச் 16-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள 529 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது அடிப்படைத் தேர்தல் உரிமைகளை இழக்கின்றனர்.
சட்ட விதிகளின்படி, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தங்களது முழுமையான தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயமாகும். அப்படி சமர்ப்பிக்க தவறுவோரை மூன்று ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
இந்தத் தகுதி நீக்கமானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேநேரம், மாநிலத் தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு இது பொருந்தாது. அதிகபட்சமாக உ.பி.யில் 120, கர்நாடகா 59, மத்திய பிரதேசம் 39, சத்தீஸ்கர் 36, தமிழ்நாடு 33, பிஹார் 28, தெலங்கானா, பஞ்சாப், உத்தராகண்ட் தலா 27, ஆந்திரா 25, கேரளா 16 உள்ளிட்ட மாநிலங்களின் 529 வேட்பாளர்கள் தகுதி நீக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.