அயோத்தி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால் ஏற்றுக் கொள்வோம்: ஜமாத் உலமா

மவுலானா அர்ஷத் மதானி - கோப்புப் படம்
மவுலானா அர்ஷத் மதானி - கோப்புப் படம்
Updated on
1 min read

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீ்ர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தினால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என ஜமாத்-எ- உலமா அமைப்பு தெரிவித்துள்ளது.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்துள்ளனர்.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மூல மனுதாரரான சித்திக்கின் வாரிசுதாரரான மெளலானா செய்யது ஆசாத் ராஷ்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் ஜமாத்-எ- உலமா அமைப்பு சார்பிலும் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறுகையில் ‘‘அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக எதிராக நாங்கள் மனுத்தாக்கல் செய்யவில்லை.

அதேசமயம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சான்றுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகவே நாங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளோம். அதேசமயம் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in