Last Updated : 29 Nov, 2019 12:12 PM

 

Published : 29 Nov 2019 12:12 PM
Last Updated : 29 Nov 2019 12:12 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- சிதம்பரத்திடம் வேலை செய்த 6 அதிகாரிகளுக்கு ஜாமீன்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியதில் தொடர்புடைய அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம்(எப்ஐபிபி) உயர் அதிகாரிகள் 6 பேருக்கு இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

2007-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அனுமதி பெறுவதற்குச் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது. அதன்பின் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். ஆனால், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் திஹார் சிறையில் இன்னும் அடைக்கப்பட்டுள்ளார்

இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற்றுக் கொள்ள நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி வழங்கிய விவகாரத்தில், முன்னாள் அதிகாரிகள் அஜித்குமார் டங்டங், பொருளாதார விவகாரத்துறை செயலாளர் ரவிந்திர பிரசாத், பிரதீப் குமார் பாகா, பிரபோத் சக்சேனா, வெளிநாட்டு வர்த்தகத்துறை இணைச் செயலாளர் அனுப் கே.பூஜாரி, கூடுதல் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் முக்கியமானவராகக் கருதப்பட்ட இந்திராணி முகர்ஜி, அரசு சாட்சியாக மாறிவிட்டார்.

இதுதவிர குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் கணக்காளர் எஸ். பாஸ்கரன், ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் இயக்குநர் பீட்டர் முகர்ஜி, ஐஎன்எக்ஸ் மீடியா, ஐஎன்எக்ஸ்நியூஸ், செஸ்மேனேஜ்மென்ட்,ஏஎஸ்பிஎல், எஐஎப்பிபி அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் மீது ஐபிசி பிரிவின் கீழ் சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய 6 அதிகாரிகளுக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராகச் சம்மன் வழங்கி இருந்தது. மேலும் இந்த அதிகாரிகளும் இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த 6 அதிகாரிகளும் சிபிஐ நீதிபதி அஜெய் குமார் குஹெர் முன் இன்று ஆஜராகினார்கள்.இந்த 6 அதிகாரிகளுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி குஹெர் இன்று உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் மனு மீது பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x