

புதுடெல்லி, சிறப்புச் செய்தியாளர்
2018-ல் சாலை விபத்துக்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இது 2.4% அதிகரித்துள்ளதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்து மரணங்களுக்கு பிரதான காரணமாக அதிக வேகம் மற்றும் சாலையின் தவறான பக்கத்தில் வண்டியை ஓட்டிச் செல்வது போன்றவைகளே காரணம் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினப்படி சராசரி 1280 சாலை விபத்துக்களும் 415 மரணங்களும் நிகழ்கின்றன. அதாவது மணிக்கு 53 விபத்துக்கள் 17 மரணங்கள் சாலைகளில் நிகழ்கின்றன என்கிறது இந்த அறிக்கை.
மொத்தம் 199 நாடுகளில் சாலைப் பாதுகாப்பில் இந்தியா மிகவும் பாதுகாப்பற்ற நாடாகத் திகழ்கிறது. சீனாவில் விபத்து மரணங்கள் ஆண்டுக்கு 63,000 ஆகவும் அமெரிக்காவில் 37,000 ஆகவும் உள்ளது.
விபத்துக்களுக்கு பெரும் காரணமாக ஓவர் ஸ்பீடும், சாலையில் தவறான பக்கத்தில் வாகனங்களை செலுத்துவதும் பிரதான காரணமாக கூறப்பட்டுள்ளது. மொபைல் போன் பேசியபடியே வண்டி ஓட்டுவதால் மரணம் ஏற்படுவஹ்டு 2.4%, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலினால் ஏற்படும் மரண விகிதம் 2.8% ஆகவும் உள்ளது.
ஹெல்மெட் இல்லாததோ, சீட் பெல்ட் அணியாததோ விபத்துக்களுக்கு காரணமாகாவிட்டாலும் தீவிர காயங்களிலிருந்து காப்பாற்றுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களில் 43,614 மரணங்கள் ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்டுள்ளது, அதாவது 28.8%. காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்று ஏற்பட்ட மரணங்கள் 2018-ல் 24,,435.
மாநிலங்களில் தமிழகம் சாலை விபத்துச் சம்பவங்களில் முதலிடம் வகிக்கிறது. மொத்த விபத்துக்களில் 13.7% தமிழ்நாட்டில் நடக்கிறது, இதற்கு அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம் (11%), உ.பி. (9.1%), என்று அரசு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.