மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவை முடிவு

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவை முடிவு
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பாஜக – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.

இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்து விட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. இதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது.

ஆனால் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

எனினும் சிவசேனாவுக்கு சில நிபந்தனைகளை விதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் புறப்பட்டுச் சென்றார். அவர் சுற்றுப்பயணம் கிளம்பும் முன்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் மகாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது என முடிவெடுக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி திட்டமிட்டபடி பிரேசில் புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in