தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி மாறனிடம் சிபிஐ 2-வது நாளாக விசாரணை

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி மாறனிடம் சிபிஐ 2-வது நாளாக விசாரணை
Updated on
1 min read

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக தீவிர விசாரணை நடத்தினர். முன்னதாக நேற்று அவரிடம் 7 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றைக்கும் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதிமாறன். பதவியில் இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 செல்போன் இணைப்புகளையும் (போஸ்ட் பெய்ட்) தனது போட் ஹவுஸ் இல்லத்தில் இருந்து முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

இந்த இணைப்புகளை, 'சன் டிவி'க்கு முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.1.2 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த திங்கட்கிழமை ஆஜராகும் படி சிபிஐ உத்தரவிட்டிருந்தது. ஆனால், தயாநிதி மாறன் ஆஜராக வில்லை. இதையடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஜூலை 1-ம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தயாநிதி மாறன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

முன்னதாக, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தயாநிதி மாறனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in