ஐஎன்எக்ஸ் வழக்கு:  சிதம்பரத்தை 24-ம் தேதி வரை  அமலாக்கப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் வழக்கு:  சிதம்பரத்தை 24-ம் தேதி வரை  அமலாக்கப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்றப் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்து அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்த விவகாரத்தை அமலாக்கப் பிரிவும் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திஹார் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யலாம் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திஹார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரைக் கைது செய்தனர்.
இந்தநிலையில் சிபிஐ வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் காவலை மேலும் 14 நாட்கள் நீடிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி அஜய் குமார் குஹர், அக்டோபர் 24-ம் தேதி வரை அவரை காவலில் வைக்க அனுமதி வழங்கினர். அதேசமயம் அமலாக்கப் பிரிவு வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிதம்பரத்தின் வயதை கருதி அவருக்கு வீட்டு உணவை தரவும், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in