Published : 11 Oct 2019 02:02 PM
Last Updated : 11 Oct 2019 02:02 PM

ஏர்செல்-மேக்சிஸ்: முன்ஜாமீன் ரத்து வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு  நோட்டீஸ்: வழக்கறிஞர் ஆஜராகவில்லை

புதுடெல்லி,

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருவரும் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி சுரேஷ் கெய்த் வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் எர்செல் மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கோடு இந்த சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வழக்கும் விசாரிக்கப்பட உள்ளது.

இன்றைய வழக்கின் விசாரணையின் போது சிதம்பரம் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ , அமலாக்கப் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 5-ம் தேதி உத்தரவிட்டது

இதற்கிடைடேய ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் தற்போது நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடை ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

அவர் வாதிடுகையில், " உச்ச நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அளித்த தீர்ப்பை கவனத்தில் கொள்ளாமல், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிதம்பரத்துக்கும், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொருளாதார குற்றங்களில் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் என்பது அவசியம். ஆதலால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்

சிதம்பரம் தரப்பில் வாதிட எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை.இதையடுத்து, சிபிஐ தாக்கல் மனுவுக்கு பதில் அளிக்க சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும், வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கும் நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் எர்செல் மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கோடு இந்த சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வழக்கும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x