Published : 09 Oct 2019 05:49 PM
Last Updated : 09 Oct 2019 05:49 PM

இடம் தெரியாமல் தாமதமான ஆம்புலன்ஸ்; உயிரிழந்த குஜராத் முதல்வரின் உறவினர்

அகமதாபாத்,

'108' ஆம்புலன்ஸ் வர தாமதமானது, முதல்வர் விஜய் ரூபானி உறவினரின் இறப்புக்குக் காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 4 ஆம் தேதி ராஜ்கோட்டில் முதல்வரின் நெருங்கிய உறவினர் அனில்பாய் சங்க்வி மூச்சுத் திணறல் காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவர் ரூபானியின் சித்தி மகன்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''கடந்த 4 ஆம் தேதி சங்விக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபிறகு 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். அதன்பிறகுதான் எங்களுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து தெரியவந்தது. ஆம்புலன்ஸ் அவரது வீட்டை அடைந்த நேரத்தில் சங்க்வி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, சங்வியின் இல்லத்திற்கு வருகை தந்த முதல்வரிடம் அவரது உறவினர்கள் ''108' ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராமல் தாமதப்படுத்தியதே சங்வியின் இறப்புக்குக் காரணமாகிவிட்டது'' என்று புகார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாஜக நிர்வாகி தெரிவித்தார்.

விசாரணைக்கு உத்தரவு: ஆட்சியர் பேட்டி

ஆம்புலன்ஸ் தாமதமே முதல்வர் உறவினரின் உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மீது விசாரணைக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் ரெம்யா மோகன் இன்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''முழு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மாநில அரசின் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நாமும் விசாரணை வளையத்தில்தான் இருக்கிறோம். ராஜ்கோட்டில் சுகாதாரத் துறையின் பிராந்திய துணை இயக்குநரால் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்கிடையில், 108 சேவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒரு ஆரம்ப அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில் ஆம்புலன்ஸ் சேவைக்காக எடுக்கப்பட்டது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், சவுராஷ்டிர காலகேந்திரா சொசைட்டியில் உள்ள சங்க்வியின் இல்லத்தை அடைய "39 நிமிடங்கள்" ஆனது. இதற்கு காரணம் இதே பெயரில் உள்ள இன்னொரு இடத்திற்கு தவறாக சென்று பார்வையிட்டதுதான் காரணம் என்று தெரியவந்தது.

சங்கிவியின் உறவினர் ஒருவர் தங்கள் குடியிருப்பு இல்லத்தை கண்டுபிடிப்பதற்காக மோடி பள்ளியை முக்கிய அடையாளமாகக் கொடுத்துள்ளார். ஆனால், மென்பொருளில் பதிவிட்டபடி அதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் ராஜ்கோட் நகரின் புறநகர்ப் பகுதியை ஒட்டிய ஐஸ்வர்யா கிராமத்திற்குதான் ஆம்புலன்ஸ் வந்தடைந்தது.

இதே பகுதியில் இன்னொரு மோடி பள்ளிக்கூடம் இருக்கிறது. இதனால் ஆம்புலன்ஸ் தடம் மாறி பின்னர் சரியான இடத்தை அடைய 39 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இறுதி விசாரணை அறிக்கையில் மேலும் பல விவரங்கள் வெளிவரும்.

மென்பொருள் மூலமாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட விதத்தில் அழைப்புகளை ஏற்று தானே செயல்படுத்தும் முறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையை வருங்காலத்தில் இன்னும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டியுள்ளது. அதன்பிறகு இதுபோன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாது.

இவ்வாறு ஆட்சியர் மோகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x