

கடப்பா
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பாலபள்ளி அருகே செம்மரங்களை வெட்டிக்கொண்டு வந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் ஆந்திரக் காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பாலபள்ளி வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக, கடத்தல் தடுப்பு அதிரடிப்படை கூடுதல் கமாண்டன்ட் ரவி சங்கருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் டிஎஸ்பி அல்லபக்ஷ், ஆர்.எஸ்.ஐ. லட்சுமணன் தலைமையில் வனப்பகுதியில் காவல்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது பாலபள்ளி ராமாபுரம் ரயில்வே கேட் அருகே 25 பேர், செம்மரங்களை வெட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் பிடிக்க முயன்ற நிலையில் அனைவரும் இருட்டில் தப்பிச் செல்ல முயன்றனர். இந்நிலையில் 25 பேரில் 10 பேரை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாராம் (42), வீரப்பன் (30), பெருமாள் செல்வம் (49), ஆண்டி மகேஷ் (28) , என்.கோவிந்தன் (25), டி.பெருமாள் (29), சி.பழனி (40), சி.ராஜு (25), ஆண்டி பெருமாள் (34), கணேசன் (26) ஆகிய 10 பேர் ஆவர்.
இவர்களைக் கைது செய்த காவல்துறையினர், அந்தப் பகுதியில் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 19 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது திருப்பதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.