Published : 23 Sep 2019 02:55 PM
Last Updated : 23 Sep 2019 02:55 PM

என்ஆர்சி மூலம் மேற்கு வங்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது பாஜக: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா

தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) மூலம் மேற்கு வங்கத்தில் அமைதியற்ற சூழலையும், பதற்றத்தையும் பாஜக ஏற்படுத்தி வருகிறது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் என்ஆர்சி இறுதிப் பட்டியல் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருந்தன. அதில் பெரும்பாலாலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்துக்கள் உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்ட தேசிய குடியுரிமைப் பதிவேடு, மேற்கு வங்கத்திலும் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மாநிலத்தில் அமல்படுத்தக்கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் தொழிற்சங்கக் கூட்டம் ஒன்றில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:

''மேற்கு வங்கத்தில் ஒருபோதும் தேசிய குடியுரிமைப் பதிவேடு பின்பற்றப்படாது. நாட்டில் வேறு எங்கும் பின்பற்றப்படாது. அசாம் மாநிலத்தில் பின்பற்றுவதற்கு மட்டுமே சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசுக்கும், அனைத்து இந்திய அசாம் மாணவர்கள் அமைப்புக்கும் இடையே நடந்த பிரச்சினையில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் வருவதை தடுக்க இது அமல்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு மாநிலங்களில் பாஜக பதற்றமான சூழலையும், அமைதியற்ற சூழலையும் உருவாக்கி வருவது வெட்கக்கேடு. இதுவரை என்ஆர்சி வந்துவிடும் எனும் அச்சத்தால் 6 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். மேற்கு வங்கத்தில் என்ஆர்சி கொண்டுவர நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.

நாட்டில் ஜனநாயக மதிப்புகளைக் குறைத்து மதிப்பிட்டு பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் உயிருடன் இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை ஆகியவை குறித்து பாஜக பேசுவதில்லை. ஆனால், தன்னுடைய அரசியல் லாபத்துக்கான விஷயங்களை மட்டுமே பாஜக பேசி வருகிறது.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் ஏபிபிவி மற்றும் பாஜகவினர் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைத்தான் மத்திய அமைச்சர் வந்தபோது வெளிக்காட்டியது. அனைத்து இடங்களிலும் சக்தியையும், அதிகாரத்தையும் பயன்படுத்த முயல்கிறார்கள்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x