Published : 14 Aug 2019 06:42 PM
Last Updated : 14 Aug 2019 06:42 PM

காஷ்மீர் மக்கள் குரல் கேட்கப்படுமா? - ‘காஷ்மீர் முடிவை விட பெரிய முடிவு வேறெதுவும் இல்லை’ - பிரதமர் மோடி பேட்டி

மோடி 2.0 என்று பிரபலமாக வர்ணிக்கப்படும் அவரது 2வது ஆட்சிக்காலம் தொடங்கி 75 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஐ.ஏ.என்.எஸ். தலைமை ஆசிரியர் சந்தீப் பம்சாயின் கேள்விகளுக்கு விரிவாகப் பதில் அளித்து பேட்டியளித்துள்ளார் பிரதமர் மோடி.

அந்த நீண்ட நேர்காணலில் காஷ்மீர் விவகாரம் குறித்து பம்சாய், “ஜம்மு காஷ்மீர் மீதான உங்கள் முடிவுக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். சிலர் எதிர்க்கவும் செய்தனர். இப்போது அங்கு ஒரு அசவுகரியமான அமைதி நிலவுகிறது. ஜம்மு மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று ஏன் சிந்தித்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மோடி, “காஷ்மீர் முடிவை எதிர்த்தவர்களின் பட்டியலைப் பாருங்கள், அவர்கள் தங்கள் நலன்களைப் பார்ப்பவர்கள், அரசியல் பரம்பரைகள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் ஆகியோர்களே. ஆனால் இந்திய தேச மக்கள், அவர்களது அரசியல் தெரிவு என்னவாக இருந்த போதிலும் ஜம்மு காஷ்மீர், லடாக் முடிவை ஆதரித்துள்ளனர். கடினமான ஆனால் முக்கிய சில முடிவுகள் முன்பு சாத்தியமேயில்லை என்பதாக இருந்தது இப்போது சாத்தியமாகி வருகிறது. இப்போது அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ எப்படி ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றை தனிமைப்படுத்தியது என்பது தெளிவாகிவருகிறது. 70 ஆண்டுகால மாறா நிலை மக்களின் ஆசைகளை நிறைவேற்றவில்லை. வளர்ச்சியின் பலன்களிலிருந்து குடிமக்கள் தள்ளி வைக்கப்பட்டனர். வருவாயைப் பெருக்க போதிய பொருளாதார வடிகால்கள் இல்லை. எங்கள் அணுகுமுறை வேறு. வறுமை என்னும் அனவஸ்தை சுழற்சிக்குப் பதிலாக மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் தேவைப்படுகிறது.

கேள்வி: இந்தப் புதிய முடிவுகளின்படி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?

ஆண்டுக்கணக்காக அச்சுறுத்தல்தான் ஆட்சி செய்தது. இப்போது வளர்ச்சிக்கு வாய்ப்பு கொடுப்போம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வாழும் என் சகோதர சகோதரிகள் எப்போதும் சிறந்த எதிர்காலம் வேண்டுமென்றே விரும்பினர். ஆனால் 370ம் பிரிவு அவர்களுக்கு அதை ஏற்படுத்த முடியவில்லை. குழந்தைகள் பெண்களுக்கு எதிரான அநீதி இருந்தது தாழ்த்தப்பட்ட பழங்குடி பிரிவினருக்கும் அநீதியே இருந்தது. ஆனால் இம்மக்களின் புதுமை வேண்டும் புத்துணர்வு மேம்படுத்தப்படவில்லை. இப்போது பீ.பி.ஓ. கம்பெனிகள் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், உணவுப்பதனிடும் தொழில், சுற்றுலா ஆகியவை இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். கல்வி மற்றும் திறன் வளர்ச்சியும் பெருகும். இந்தப் பகுதியில் வாழும் மக்களாலேயே இந்தப் பகுதி முன்னேற்றம் காணும். 370 மற்றும் 35ஏ இவர்களைக் கட்டிப்போட்ட சங்கிலியாகும். இந்தச் சங்கிலி தற்போது உடைத்தெறியப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் விதியை அவர்களே வடிவமைப்பார்கள்.

ஜம்மு காஷ்மீர் முடிவை எதிர்ப்பவர்கள் ஒரேயொரு அடிப்படை கேள்விக்கு விடையளிக்க வேண்டும் 370 மற்றும் 35ஏ குறித்த அவர்களது ஆதரவுகளுக்கு ஏதாவது மீதமிருக்கிறதா? என்ற கேள்வியே இது. அவர்களிடம் இதற்கு விடையில்லை. இவர்கள்தான் சாமானிய மக்களுக்கு உதவுவதற்காக எது வந்தாலும் அதை எதிர்க்கின்றனர். மக்களுக்கு குடிநீர், தண்ணீர் வசதிக்காக திட்டமிருக்கிறது, ஆனால் எதிர்ப்பார்கள். ரயில்வே பாலம் கட்டப்படுகிறது ஆனால் எதிர்ப்பார்கள். அவர்கள் இருதயம் மாவோயிஸ்ட்களுக்காகவும் தீவிரவாதத்திற்காக மட்டுமே துடிக்கிறது இவர்கள் சாமானிய மக்களை மதிப்பதில்லை.

கேள்வி: ஆனால் ஜனநாயகம் பற்றிய கவலைகளே இல்லையா? காஷ்மீர் மக்கள் குரல் கேட்கப்படுமா?

ஜனநாயகத்துக்கு ஆதரவான இத்தகைய கடப்பாட்டுணர்வை காஷ்மீர் மக்கள் இதுவரை கண்டதில்லை. பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிப்பு விகிதம் நினைவிருக்கிறதா? எதிர்ப்புகளையும் மீறி மக்கள் பெருமளவில் வாக்களித்தனர். 2018 நவம்பர், டிசம்பரில் மட்டும் 35,000 பஞ்சாயத்துத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்து தேர்தல்களில் வாக்குப்பதிவு விகிதம் சாதனையான 74%. பஞ்சாயத்து தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்களும் இல்லை. தேர்தல் வன்முறை என்ற பெயரில் ஒருதுளி ரத்தம் சிந்தப்படவில்லை. தற்போது பஞ்சாயத்து முன்னிலைக்கு வந்துள்ளது திருப்தியளிக்கிறது, இதன் மூலம் வளர்ச்சி மக்கள் அதிகாரம் மேலும் வளரும்... இது முக்கியக் கட்சிகள் பெரிய அளவில் பங்கேற்காத நிலையில் நடந்துள்ளது.

இத்தனையாண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த பணியாற்றவில்லை. இதில் ஜனநாயகம் பற்றி அவர்கள் பெரிய பிரசங்கங்கள் நிகழ்த்துகிறார்கள். ஆனால் வார்த்தைகள் செயல்களாக மாறவில்லை. 73ம் சட்டத்திருத்தம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது என்பது என்னை வருத்தமடையச் செய்தது. இத்தகைய அநீதியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?கடந்த சில ஆண்டுகளாகத்தான் பஞ்சாயத்துக்கள் மக்களின் முன்னேற்றம் குறித்துச் செயலாற்றி வருகிறது. தற்போது, மதிப்புக்குரிய கவர்னர் அவர்கள் பிளாக் பஞ்சாயத்து தேர்தலையும் நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளேன்..

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ‘கிராமத்துக்கு திரும்புங்கள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது இதில் மக்கள் அரசிடம் வருவதற்குப் பதிலாக அரசு நிர்வாகம் மக்களிடம் சென்றது. சாமானிய மக்கல் இதனை வரவேற்றனர். இதன் முடிவுகளை அனைவரும் பார்க்கலாம். ஸ்வச் பாரத், ஊரக மின்மயமாக்கம், மற்றும் சில முயற்சிகள் வேரடி வரை சென்றுள்ளது. இதுதான் உண்மையான ஜனநாயகம். எப்படியிருந்தாலும் ஜம்மு காஷ்மிர் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று நான் உறுதியளித்துள்ளேன். பெரும்பகுதி மக்களை இப்பகுதிகளைச் சேர்ந்தவர்களே பிரதிநிதித்துவம் செய்வார்கள். ஆம், காஷ்மீரை ஆண்டவர்கள் இது அவர்களது புனித உரிமை என்று கருதி வந்தனர், ஆகவே ஜனநாயகத்தை வெறுத்தனர், சரியற்ற கதையாடல்களை பரப்பி வந்தனர். சுயமாக உருவாகும் இளம் தலைமை உருவாவதை இவர்கள் விரும்பவில்லை. இதே நபர்களின் நடத்தைகள்தன 1987 தேர்தல்களின் போது சந்தேகத்திற்கிடமானது. அரசியல் சட்டம் 370ம் பிரிவு இங்குள்ள அரசியல் வர்க்கத்துக்கு பொறுப்பையும் வெளிப்படைத்தன்மையையும் துறப்பதற்கும் தவிர்ப்பதற்குமே பயன்பட்டு வந்தது. இதனை அகற்றுவது கூடுதல் ஜனநாயகத்துக்கு வழிவகுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x