

லக்னோ
குவைத்தில் வேலை செய்யும் கணவர் உத்தர பிரதேசத்தில் வசிக்கும் மனைவியை வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் செய்த சம்பவம் நடந்துள்ளது. அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் முஸாபர்பூரில் பிஹாரி கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை அவரது கணவர் குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் கூறி விவகாரத்து செய்துள்ளார்.
அந்த பெண்ணிடம் மணமகன் வீட்டார் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று அந்த பெண் உள்ளூர் காவல்நிலையத்திற்கு வந்து தனது கணவர் தன்னை குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் விவகாரத்து செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார்.
இது சட்டவிரோதம் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.