

புதுடெல்லி,
தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் இல்லை என்று மத்தியஅமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியதற்கு, பரூக் அப்துல்லா மறுத்து என்னையும், எனது மகனையும் வீட்டுச்சிறையில் வைத்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின்படி கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு சிறப்பு உரிமைகள், வழங்கப்பட்டு வந்தன. மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் திருத்த மசோதா கொண்டு வந்து அவற்றை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தது.
அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், மற்றொரு பகுதியான லடாக் பகுதியை துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இந்த மோசாத மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டநிலையில் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
மக்களவையில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி. குஞ்சாலிக்குட்டி பேசுகையில், " காஷ்மீர் மக்களின் பிரதிநிதி பேசும் ஒருவார்த்தையைக் கூட கேட்கத் தயாரக இல்லை.தீவிரவாதிகளின் கரங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள்.2-வது முறையாக ஆட்சிக்குவருவது பெரிய விஷயமல்ல, காங்கிரஸ் கட்சியும் கூட 2-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.
மக்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்று வகுப்புவாத திட்டத்தை செயல்படுத்துகிறீர்கள். ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்துகிறீர்கள் காஷ்மீரில் மத்திய அரசு செய்தது மக்கள் மீது தொடரப்பட்ட போர், எந்த கட்சியையும் கலந்தாலோசிக்காமல் செய்துள்ளீர்கள்.
ஜம்முகாஷ்மீரில் உங்களின் அரசு இருந்தபோது இதை ஏன் செய்யவில்லை. இதற்கு மன்னிப்பு கோர வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநில எம்.பி. பரூக் அப்துல்லாவும் சபைக்கு வரவில்லை " எனத் தெரிவித்தார்.
உடனே எழுந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா " பரூக் அப்துல்லா விருப்பத்தின் அடிப்படையில்தான் வீட்டில் இருக்கிறார். அவர் வீட்டுச்சிறையில் இல்லை " என்று விளக்கம் அளித்தார்.
ஆனால், ஸ்ரீநகரில் இருக்கும் தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா ஊடகங்களுக்கு திடீரென பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பொய். எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் வீட்டுச்சிறையில்தான் இல்லை என்றால் என்னை ஏன் வெளியே விட மறுக்கிறார்கள். என்னை யார் அடைத்து வைத்துள்ளார்கள். என்வீ்ட்டுக்கதவில் மிகப்பெரிய பூட்டு ஏன் போடப்பட்டுள்ளது. எனது மகனும்கூட வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார்.
இந்த பிராந்தியத்தைப் பிரித்து, மக்களின் இதயங்களயும் பிரி்த்துவிட்டது மத்திய அரசு. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது. எங்களின் முதுகில் குத்தாதீர்கள், நெஞ்சில் சுடுங்கள். என்னுடைய இந்தியா அனைவருக்குமானது என நினைத்தேன். மதச்சார்பற்றது, ஒற்றுமையானது என நினைத்தோம். இது சாதாரண விஷயமல்ல. இது நேரு கொடுத்தது, இதை விட்டுவிடமாட்டோம் , அமர்ந்து பேசுவோம் கைவிடமாட்டோம் " எனத் தெரிவித்தார்.