மும்பையில் மீண்டும் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

மும்பையில் மீண்டும் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
Updated on
1 min read

மும்பை
 
மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகர் முழுவதும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. கடும் மழையால் முன்சென்ற வாகனம் தெரியாமல் மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இங்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரவுமுழுவதும் அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

புறநகர் பகுதியான தானேயிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், ஊழியர்கள் அலுவகங்களுக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். 

இதனிடையே, இன்று காலை கடும் மழை பெய்தநிலையில் அந்தேரியில் மழை நீர் சூழந்து இருந்ததால் கார் ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றது. இதை கவனிக்காமல் எதிரே வந்த கார் அந்த கார் மீது வேகமாக மோதியது. அதேசமயம் பின்னால் வந்த மற்றொரு காரும் மோதியது. அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதியதில் அதில் இருந்த 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in