சந்திராயன்- 2 விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது: ஏற்பாடுகள் தயார்
புதுடெல்லி
சந்திராயன் 2 விண்கலம் நாளை பகல் 2.43 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்து வருகிறது.
நிலவை ஆராய்வதற்கான சந்திராயன் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஜூலை 15 அன்று விண்ணில் ஏவ திட்டமிட்டது. இந்த விண்கலம் ஏவுவுதற்கு சில மணிநேரத்துக்கு முன்பாக, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் எரி பொருள் நிரப்பும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படுவது கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து, சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்து வருகிறது.
இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறியதாவது:
சந்திராயன் -2 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல். திட்டமிட்டபடி நாளை விண்ணில் ஏவப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சந்திரன் குறித்த ஆய்வு மட்டுமின்றி விண்வெளி ஆய்வில் புதிய இலக்கை நோக்கி இந்திய பயணம் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
