Published : 21 May 2015 02:20 PM
Last Updated : 21 May 2015 02:20 PM

தன்பாலின உறவாளர் மகனுக்கு வரன் தேடிய தாய்: விளம்பரத்துக்கு கலவையான விமர்சனங்கள்

தன்பாலின உறவாளர் மகனுக்கு மணமகன் வேண்டும் என்று இளைஞரின் தாய் அளித்த விளம்பரத்துக்கு பொதுமக்கள் கலவையான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்தவர் ஹரீஷ் அய்யர். இவர் தன்பாலின உறவு மீது ஈடுபாடு கொண்டவர். ஹரீஷின் தாய் அவருக்கு ஏற்ற மணமகனை தேடும் முயற்சியில், “தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் எனது மகன் ஹரீஷ் அய்யருக்கு 25 முதல் 40 வயதுள்ள, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய, விலங்கு மீது அன்பு செலுத்தும், சைவ உணவுப் பழக்கம் கொண்ட மணமகன் தேவை. ஜாதி தடையில்லை (அய்யருக்கு முன்னுரிமை)” என்ற விளம்பரத்தை அளித்திருந்தார்.

மும்பையில் வெளியாகும் 'மிட் டே' பத்திரிகையில் வந்த இது தொடர்பான விளம்பரத்துக்கு சமூகத்தில் இருவேறு எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலான கருத்துக்கள் தற்போது எழுகின்றன.

திருமணத்துக்கு துணைத் தேட விளம்பரப்படுத்துவது இந்தியப் பெற்றோர்கள் மத்தியில் சாதாரணமான மனநிலையானது என்றாலும், தன்பாலின மகனுக்காக விளம்பரப்படுத்தியது துணிவான முற்போக்குச் சிந்தனையாக பாராட்டப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த விளம்பரம் வைரலாக பரவிவருகிறது.

அதே சமயம், குறிப்பாக அய்யர் மணமகன் தேவை என்று இளைஞரின் தாய் விளம்பரப்படுத்தியது இன ரீதியிலான பிற்போக்குத்தனம் என்று மறுத் தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது. பல பத்திரிகைகளிலும் ஹரீஷ் மற்றும் அவரது தாயின் செயலை பாராட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்டவரின் விளம்பரம் இருவேறு எண்ணங்களை கொண்ட சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் விளம்பரத்தை அளித்த ஹரீஷ் அய்யரின் தாய் பத்மா-வை தி இந்து தொடர்புகொண்டு கேட்டபோது, "அய்யர் என குறிப்பிட்டு எவரையும் கீழ்மைப்படுத்தி ஒதுக்கவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ அத்தகைய விளம்பரத்தை அளிக்கவில்லை.

நான் தனிப்பட்ட முறையில் எந்த மதத்தினரையும் வெறுக்கும் எண்ணம் கொண்டதில்லை. ஜாதி/ மதம் தடை இல்லை என்ற விளம்பரங்கள் மிகக் குறைவாக தான் வெளியாகின்றன. எந்தப் பத்திரிகையை திறந்தாலும் கோத்திரம், நிறம் உள்ளிட்ட சில குறிப்புகள் இடம்பெறுகின்றன. திருமண மார்க்கெட் அத்தகைய சூழலில் தான் இருக்கிறது. ஆனால் இதனை யாரும் எதிர்ப்பது இல்லை. எனது தன்பாலின உறவு விருப்பம் கொண்ட மகனுக்காக நான் சில குறிப்புகளை விளம்பரப்படுத்தும்போது மட்டும் எதற்காக இவர்கள் எதிர்க்க வேண்டும்" என்றார்.

சமூக வலைதளங்களில் எழுந்துள்ள சர்ச்சையால் வெகுண்டெழுந்துள்ள ஹரீஷ், "ஒரு சமூகத்தை குறிப்பிடுவதன் மூலம் அதனை சார்ந்தவர்கள் அந்த விளம்பரத்தை பார்க்கவாவது செய்வார்கள். அதன் மூலம் என் மீது யாராவது ஈர்க்கப்படலாம் என்பது தான் எனது தாயின் நோக்கமாக இருந்தது. இதில் பிறரை தாழ்மைப்படுத்தும் விதமான செயல் ஏதும் இல்லை. தன் மகனுக்கு தனது கலாசாரத்தை ஏற்றுக் கொண்டு அல்லது அதன் வழியில் பிறந்து வந்த ஒருவரை துணையாக தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தாயின் மனநிலையும்.

எனது விருப்பம் என்னவென்றால் எனக்கானத் துணை விலங்குகள் மீது பாசம் கொண்டும் சைவ உணவை விரும்புபவராக இருக்க வேண்டும் என்பது தான்" என்றார்.

ஹரீஷ் அய்யர் தன்பாலின உறவாளர்களுக்காக போராடும் மும்பையைச் சேந்த தன்னார்வு இயத்தில் பணியாற்றி வருகிறார். ஆமிர் கான் வழங்கும் சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து விவாதித்துள்ளார்.

ஹரீஷ்க்கான விளம்பரத்தை வெளியிட பல பத்திரிகைகளை பத்மா நாடியுள்ளார். ஆனால் இத்தகைய விளம்பரங்களை பிரசுரிக்க முடியாது என்று பல பத்திரிகைகள் மறுத்துவிட்டன. இதன் மூலம் சட்ட சிக்கல் ஏற்படும் என்று பத்திரிகைகள் அளித்த விளக்கம் பத்மாவை கோபமடைய செய்தது. இறுதியாக 'மிட் டே' பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x