

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் சுகாதாரத் துறையிடம் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) விரிவான அறிக்கை கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து சத்தர்பூர் மாவட்ட தலைமை மருத்துவர் ஆர்.பி.குப்தா கூறுகையில், ‘‘கடந்த ஏப்ரல் முதல் மருத்துவமனையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது விசாரணையை ஏறக்குறைய முடித்துவிட்டது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரசவ அறை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அலட்சியமாக இருந்த சில ஊழியர்களை சிவில் சர்ஜன் சமீபத்தில் பணிநீக்கம் செய்துள்ளார்’’ என்றார்.
பிரசவ நடைமுறையில்.. இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் வட்டாரம் கூறுகையில், ‘‘குழந்தைகள் இறப்புக்கு தொழில்நுட்ப மற்றும் சமூக காரணங்களை மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. இதில் கிராமப்புறங்களில் இருந்து கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் ஏற்படும் தாமதம் முக்கிய இடம் பெற்றுள்ளது.
சுகாதார மையங்களில் இருந்து சரியான நேரத்தில் பரிந்துரை செய்யப்படாததும் காரணமாகி உள்ளது. இவையன்றி, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, சில குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் இருப்பதும் காரணங்களாக காட்டப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு வந்த பிறகு அறுவை சிகிச்சை அல்லது இயல்பான பிரசவ நடைமுறையில் ஏற்படும் தாமதமும் ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.
இந்த உயிரிழப்புகளை குறைக்க ம.பி. அரசு பெருமளவில் முயற்சித்து வருகிறது. தற்போது அதன் பலனாக முன்பு அதிகமாக இருந்த குழந்தை இறப்பு தற்போது 6 சதவீதத்திற்கு குறைந்துள்ளது.