ஆந்திர, தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை நடத்த ஹைதராபாத் வருகை

ஆந்திர, தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை நடத்த ஹைதராபாத் வருகை
Updated on
1 min read

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்த வழக்குகளை விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய குழு, அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஹைதராபாத் வந்தது. இக்குழு 3 நாட்கள் ஹைதராபாத் தில் தங்கி திருப்பதி செம்மர என்கவுன்ட்டர் உட்பட பல்வேறு புகார்கள் குறித்து பகிரங்க விசாரணை நடத்த உள்ளது.

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு நேற்று காலை ஹைதராபாத் வந்தது. இக்குழு நாளை (24-ம் தேதி) வரை ஹைதராபாத்தில் தங்கி திருப்பதி சேஷாசலம் என்கவுன்ட்டர், வாரங்கலில் நடந்த தீவிரவாதிகளின் மீதான என்கவுன்ட்டர் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல் குறித்து வந்த புகார்கள் குறித்து நேரடியாக விசாரணை நடத்த உள்ளது. இதில் தெலங்கானா மாநிலத்தில் மட்டும் மனித உரிமை மீறல் குறித்து 34 வழக்குகள் உள்ளன. மேலும் 61 எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் உள்ளன.

ஹைதராபாத்தில் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை வழக்குகளில் மனித உரிமை மீறல் குறித்து நேரடி விசாரணை நேற்று நடைபெற்றது. முன்னதாக தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியது:

நாட்டில் மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படமால காக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுடையது. ஆந்திர அரசுக்கு தலைநகர் முக்கியம். தெலங்கானா அரசுக்கு வளர்ச்சி முக்கியம். ஆனால் இதர விஷயங்களில் அலட்சியம் கூடாது. இந்த 3 நாட்களில் தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்து வந்துள்ள பல்வேறு வழக்குகள் குறித்து பகிரங்க விசாரணை நடத்தப்படும். பின்னர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். இவ்வாறு தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in